சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

Back to Top
நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
11.032   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

11.032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்   (கோயில் (சிதம்பரம்) )
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து
நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்திக்கி
லேன்அன்று வானருய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை
யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணா வருட்
கியானினி யாரென்பனே.

[1]
என்பும் தழுவிய ஊனும்
நெகஅக மேயெழுந்த
அன்பின் வழிவந்த வாரமிர்
தேயடி யேனுரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ
லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின்
றாடிய விண்ணவனே.

[2]
அவநெறிக் கேவிழப் புக்கவிந்
தியான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேயிட்ட தத்துவ
னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேயென்னை உய்ப்பவ
னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை
நட்டம் பயில்கின்றதே.

[3]
பயல்கின் றிலேன்நின் திறத்திரு
நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன்நின் திருவடிக்
கேயப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்
பலத்துளெந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நானெங்ங னேபெறு
மாறுநின் னாரருளே.

[4]
அருதிக்கு விம்ம நிவந்ததோ
வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி யுமிழ்கின்றதே
யொக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும்
கைத்தலம் நான்கும் மெய்த்த
சுருதிப் பதமுழங் குந்தில்லை
மேய சுடரிருட்கே.

[5]
சுடலைப் பொடியும் படுதலை
மாலையும் சூழ்ந்தவென்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென்
தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை
வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது
வேத வினோதத்தையே.

[6]
வேத முதல்வன் தலையும்
தலையாய வேள்விதன்னுள்
நாத னவனெச்சன் நற்றலை
யும் தக்க னார்தலையுங்
காதிய தில்லைச்சிற் றம்பலத்
தான்கழல் சூழ்ந்துநின்று
மாதவ ரென்னோ மறைமொழி
யாலே வழுத்துவதே.

[7]
வழுத்திய சீர்த்திரு மாலுல
குண்டுவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றான்உட்கப்
பாந்தளைக் கங்கணமாச்
செழுந்திரள் நீர்த்திருச் சிற்றம்
பலத்தான் திருக்கையிட
அழுத்திய கல்லொத் தன்ஆய
னாகிய மாயவனே.

[8]
மாயவன் முந்நீர்த் துயின்றவன்
அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
றாடுங் கழலெவர்க்குந்
தாயவன் தன்பொற் கழலென்
தலைமறை நன்னிழலே.

[9]
நிழல்படு பூண்நெடு மாலயன்
காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னக லேந்தித்
தமருகம் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி
நீர்த்தில்லை யம்பலத்தே
குழல்படு சொல்வழி யாடுவர்
யாவர்க்குங் கூத்தினையே.

[10]
கூத்தனென் றுந்தில்லை வாணனென்
றுங்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை
யாதே யிடுதுணங்கை
மூத்தவன் பெண்டிர் குணலையிட்
டாலும் முகில்நிறத்த
சாத்தனென் றாலும் வருமோ
இவளுக்குத் தண்ணெனவே.

[11]
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்
பலந்தன்னின் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப்
பாயென் னுடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங்
கிலோதிரு நாமங்கள் கற்
றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி
லோவெனக் கிப்பிறப்பே.

[12]
பிறவியிற் பெற்ற பயனொன்று
கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள்
நாடக மாடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக்
கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண்
டின்பத்தை உண்டிடவே.

[13]
உண்டேன் அவரரு ளாரமிர்
தத்தினை வுண்டலுமே
கண்டேன் எடுத்த கழலுங்
கனலுங் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய
நோக்கு மொளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை யம்பலத்
தாடும் மணியினையே.

[14]
மண்யொப் பனதிரு மால்மகு
டத்து மலர்க்கமலத்
தணியொப் பனவவன் தன்முடி
மேலடி யேனிடர்க்குத்
துணியச் சமைத்தநல் ஈர்வா
ளனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை யம்பலத்
தான்தன் திருந்தடியே.

[15]
அடியிட்ட கண்ணினுக் கோஅவ
னன்பினுக் கோ அவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற்
கோ தில்லை யம்பலத்து
முடியிட்ட கொன்றை நன் முக்கட்
பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக் கீந்தது
வாய்ந்த அரும்படையே.

[16]
படைபடு கண்ணிதன் பங்கதென்
தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பங்
கேளென் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும்
நீவைத் தருளூகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய
பாதமென் னுள்புகவே.

[17]
புகவிகிர் வாளெயிற் றானிலங்
கீண்டு பொறிகலங்கி
மிகவுகும் மாற்கரும் பாதத்த
னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற்
கங்கண னென்றனன்றும்
தகவு கொலாம்தக வன்று
கொலாமென்று சங்கிப்பனே.

[18]
சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
தானவர் நான்முகத்தோன்
செங்கோல விந்திரன் தோள்தலை
யூர்வேள்வி சீருடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்
டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
கடைக்கண் சிவந்திடவே.

[19]
ஏவுசெய் மேருத் தடக்கை
யெழில்தில்லை யம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரானன்றி
யங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல்
வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட்
டியதிறல் வேடுவனே.

[20]
வேடனென் றாள்வில் விசயற்கு
வெங்கணை யன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென்
றாள்இடக் காதிலிட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை
யம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை யங்கைச்
சரிவளை சிந்தினவே.

[21]
சிந்திக் கவும்உரை யாடவும்
செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கர
மென்னும் வழிகள்பெற்றுஞ்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
ணார்தில்லை யம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனியெம்
மான்ற னருள்பெறவே.

[22]
அருள்தரு சீர்த்தில்லை யம்பலத்
தான்தன் அருளினன்றிப்
பொருள்தரு வானத் தரசாத
லிற்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோனரு
ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து
வீழும் இருஞ்சிறையே.

[23]
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல்
தில்லைச் சிற் றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு
நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்
தோடேந்தும் வித்தகர்தம்
உரைப்புள வோவயன் மாலினொ
டும்பர்தம் நாயகற்கே.

[24]
அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக்
கூத்த அடியமிட்ட
முகிழ்சூ ழிலையும் முகைகளு
மேயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித்
திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூ ழிமையவர் போற்றித்
தொழுநின் பூங்கழற்கே.

[25]
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப்
பொலிசெம்பொ னம்பலத்து
வேந்தன் தனக்கன்றி யாட்செய்வ
தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன்
பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும்
திருவமிர் தாகியதே.

[26]
ஆகங் கனகனைக் கீறிய
கோளரிக் கஞ்சிவிண்ணோர்
பாகங் கனங்குழை யாய்அரு
ளாயெனத் தில்லைப்பிரான்
வேகம் தருஞ்சிம்புள் விட்டரி
வெங்கதஞ் செற்றிலனேல்
மோகங் கலந்தன் றுலந்ததன்
றோவிந்த மூவுலகே.

[27]
மூவுலக கத்தவ ரேத்தித்
தொழுதில்லை முக்கட்பிராற்
கேவு தொழில்செய்யப் பெற்றவர்
யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட் டெடுத்தனன்
மாலயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன்
மாமிக்க வேதங்களே.

[28]
வேதகச் சிந்தை விரும்பிய
வன்தில்லை யம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்சேய
வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவா
ளரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்ஐயன்
தந்த தலைமகனே.

[29]
தலையவன் பின்னவன் தாய்தந்தை
யிந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந்
தோன்அடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன்
ஆலத் தெழுகொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை
யம்பலத் துள்ளிறையே.

[30]
இறையும் தெளிகிலர் கண்டும்
எழில்தில்லை யம்பலத்துள்
அறையும் புனல்சென்னி யோனரு
ளாலன் றடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ
ரனும்நிறை தார்ப்பரிமேல்
நறையும் கமழ்தொங்கல் வில்லவ
னும்புக்க நல்வழியே.

[31]
நல்வழி நின்றார் பகைநன்று
நொய்ய ருறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு
சீர்த்தில்லை யம்பலத்து
வில்வழி தானவ ரூரெரித்
தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின் றளித்தனன்
காண்க சிவகதியே.

[32]
கதியே யடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடையமிர்
தேநின்னை யென்னுள்வைத்த
மதியே வளர்தில்லை யம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே.

[33]
பிழையா யினவே பெருக்கிநின்
பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும்
மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை
முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய் தில்லை
நாத பொறுத்தருளே.

[34]
பொறுத்தில னேனும்பல் நஞ்சினைப்
பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப்
பிரானத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத்
தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக்
கென்கொல் அடுப்பனவே.

[35]
அடுக்கிய சீலைய ராய்அக
லேந்தித் தசையெலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூணிரப்
பாரொள் ளிரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச்
சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்றன் தில்லை
தொழாவிட்ட ஏழையரே.

[36]
ஏழையென் புன்மை கருதா
திடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே
மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க
வளர்தில்லை யம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி
மேல்வைத்த புண்ணியனே.

[37]
புண்ணிய னேயென்று போற்றி
செயாது புலன்வழியே
நண்ணிய னேற்கினி யாதுகொ லாம்புகல்
என்னுள் வந்திட்
டண்ணிய னேதில்லை யம்பல வாஅலர்
திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன்
வெளுப்பக் கறுத்தவனே.

[38]
கறுத்தகண் டாஅண்ட வாணா
வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
யாயென்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ
பிறர்என் னுறுதுயரை
அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ
வருஞ்சொ லரும்பழியே.

[39]
பழித்தக் கவுமிக ழான்தில்லை
யான்பண்டு வேட்டுவனும்
அழித்திட் டிறைச்சி கலைய
னளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீரதி பத்தன்
படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க வென்னா தமிர்துசெய்
தானென் றியம்புவரே.

[40]
வரந்தரு மாறிதன் மேலுமுண்
டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற
பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற வென்னையும்
மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்
பேசருந் தன்மையிதே.

[41]
தன்தாள் தரித்தார் யாவர்க்கும்
மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
கொடிமேல் விடையுடையோன்
மன்றா டவும்பின்னும் மற்றவன்
பாதம் வணங்கியங்கே
ஒன்றார் இரண்டில் விழுவரந்
தோசில வூமர்களே.

[42]
களைக கணிலாமையுந் தன்பொற்
கழல்துணை யாந்தன்மையும்
துளைக ணிலாம்முகக் கைக்கரிப்
போர்வைச் சுரம்நினையாம்
தளைக ணிலாமலர்க் கொன்றையன்
தண்புலி யூரனென்றேன்
வளைக ணிலாமை வணங்கும்
அநங்கன் வரிசிலையே.

[43]
வரித்தடந் திண்சிலை மன்மத
னாதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மக னென்பதோர்
பொற்புந் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுட் சிற்றம்
பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி
யேயன்றி நின்றிலவே.

[44]
நின்றில வேவிச யன்னொடுஞ்
சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநட மாடும்
பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச்
சரங்கொண் டிழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந்
தார்த்த கரியவனே.

[45]
கருப்புரு வத்திரு வார்த்தைகள்
கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம்
உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை யென்னைவந்
தாண்டது மெவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
யாடல் புரிந்தவனே.

[46]
புரிந்தஅன் பின்றியும் பொய்மையி
லேயும் திசைவழியே
விரிந்தகங் கைம்மலர் சென்னியில்
கூப்பின் வியன்நமனார்
பரிந்தவ னூர்புக லில்லை
பதிமூன் றெரியவம்பு
தெரிந்தவெங் கோன்தன் திரையார்
புனல்வயற் சேண்தில்லையே.

[47]
சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
கூத்தனைக் கண்டுமன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
யாங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை யின்னம் புலன்வழி
யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை யென்னையென் செய்திட
வோசிந்தை நீவிளம்பே.

[48]
விளவைத் தளர்வித்த விண்டுவுந்
தாமரை மேலயனும்
அளவிற்கு அறியா வகைநின்ற
வன்றும் அடுக்கல்பெற்ற
தளர்வில் திருநகை யாளும்நின்
பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட
வார்சடைக் கங்கையனே.

[49]
கங்கை வலம்இடம் பூவலங்
குண்டலம் தோடிடப்பால்
தங்குங் கரம்வலம் வெம்மழு
வீயிடம் பாந்தள்வலம்
சங்க மிடம்வலம் தோலிட
மாடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்கா
ணிடமணங்கே.

[50]
அணங் காடகக்குன்ற மாதற
ஆட்டிய வாலமர்ந்தாட்
கிணங்கா யவன்தில்லை யெல்லை
மிதித்தலு மென்புருகா
வணங்கா வழுத்தா விழாவெழும்
பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவளென்ன வென்றுகொ
லாம்வந்து கூடுவதே.

[51]
கூடுவ தம்பலக் கூத்த
னடியார் குழுவுதொறும்
தேடுவ தாங்கவ னாக்கமச்
செவ்வழி யவ்வழியே
ஓடுவ துள்ளத் திருத்துவ
தொண்டசுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல்
லோர்செய்யும் வித்தகமே.

[52]
வித்தகச் செஞ்சடை வெண்மதிக்
கார்நிறக் கண்டத்தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை
மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும்
திறத்தா கமியர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக் கெங்குத்த
தோஅரன் பொன்னடியே.

[53]
பொன்னம் பலத்துறை புண்ணிய
னென்பர் புயல்மறந்த
கன்னன்மை தீரப் புனிற்றுக்
கலிக்காமற் கன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந் தீரறு
வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் மழைதவிர்த் தீரறு
வேலிகொள் பிஞ்ஞகனே.

[54]
நேசனல் லேன்நினை யேன்வினை
தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ்
சேனென்தன் வாயதனால்
தேசனென் னானைபொன் னார்திருச்
சிற்றம் பலம்நிலவும்
ஈசனென் னேன்பிறப் பென்னாய்க்
கழியுங்கொல் என்தனக்கே.

[55]
தனந்தலை சக்கரம் வானத் தலைமை
குபேரன் தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா
சவன்உயிர் பல்லுடலூர்
சினந்தலை காலன் பகல்காமன்
தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்னரு ளால்முனி
வால்பெற் றிகந்தவரே.

[56]
அவமதித் தாழ்நர கத்தில்
இடப்படும் ஆதர்களும்
தவமதித் தொப்பில ரென்னவிண்
ணாளுந் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம்
பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும்
நினைந்திட்ட செல்வருமே.

[57]
வருவா சகத்தினில் முற்றுணர்ந்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே.

[58]
சிரித்திட்ட செம்பவ ளத்தின்
திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும்
வெங்கதப் பாந்தளும் தீத்
தரித்திட்ட வங்கையும் சங்கச்
சுருளுமென் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லை சிற்றம்
பலத்துத் திருநடனே.

[59]
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி
வென்செயும் காமனன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக்
குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர்
வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலனந் நாள்நின்
றுதையுணா விட்டனனே.

[60]
விட்டங் கொளிமணிப் பூண்திகழ்
வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியன்நல் லானல்லன்
அம்பலத் தெம்பரன்மேல்
கட்டங் கியகணை யெய்தலுந்
தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று
பார்க்கப் பொடிந்தனனே.

[61]
பொடிஏர் தருமே னியனாகிப்
பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு
கோயிற் கருவியில்லா
வடியே படவமை யுங்கணை
யென்ற வரகுணன்தன்
முடி ஏர்தருகழ லம்பலத்
தாடிதன் மொய்கழலே.

[62]
கழலும் பசுபாசர் ஆம்இமை
யோர்தங் கழல்பணிந்திட்
டழலு மிருக்குந் தருக்குடை
யோர்இடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித்
தாடிசிற் றம்பலத்தைச்
சுழலு மொருகா லிருகால்
வரவல்ல தோன்றல்களே.

[63]
தோன்றலை வெண்மதி தாங்கியைத்
துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி
யோன்றன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்றலை யான்பா லதுகலந்
தாலன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென்
றோதில்லை மன்றிடையே.

[64]
மன்றங் கமர்திருச் சிற்றம்
பலவ வடவனத்து
மின்றங் கிடைக் குந்தி நாடக
மாடக்கொல் வெண்தரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச்
சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேலடை
யாவிட்ட கைதவமே.

[65]
தவனைத் தவத்தவர்க் கன்பனைத்
தன்னடி யெற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத்
தைச்சிவந் தானைச்செய்ய
அவனைத் தவளத் திருநீ
றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை
வல்வினை பற்றறவே.

[66]
பற்றற முப்புரம் வெந்தது
பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றறு மாமணிக் கோயிலின்
நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புக ழேத்தித்
திரிவது சூழ்சடையோய்
புற்றர வாட்டித் திரியும்
அதுவொரு புல்லனவே.

[67]
புல்லறி வின்மற்றைத் தேவரும்
பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக்
கண்ணியனைப் போலருளுவரே
கல்லெறிந் தானுந்தன்
வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா
வழிசென்று நண்ணினரே.

[68]
நண்ணிய தீவினை நாசஞ்
செலுத்தி நமனுலகத்
தெண்ணினை நீக்கி இமையோ
ருகலத் திருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம்
பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை
யாரத் தொழுமின்களே.

[69]
கைச்செல்வ மெய்திட லாமென்று
பின்சென்று கண்குழியல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்
கேயென்றும் பொன்றலில்லா
அச்செல்வ மெய்திட வேண்டுதி
யேல்தில்லை யம்பலத்துள்
இச்செல்வன் பாதங் கருதிரந்
தேனுன்னை யென்னெஞ்சமே.

[70]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool